tamilnadu

img

தமிழ்நாடு வேளாண் பல்கலை. தொலைதூரக் கல்வி -  4 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில் தொலைதூர கல்வி சேர்க்கை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பல்கலைக்கழக கூட்டுறங்கில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி வேளாண்மையில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் வழங்கப்படும் தொலைதூர கல்வி பட்டயப்படிப்புகள் குறித்து விளக்கினார்.

அப்போது பேசியவர், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்கத்தின் சார்பில் 44 வகையான ஆறு மாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பெருக்க முறைகள், நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, தேனி வளர்ப்பு ஆகிய பாடங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, எந்த பகுதியில் இருந்தும் கற்றுக் கொள்ளும் வகையில் இணைய வழியில் பட்டயப்படிப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பானது உரம், விதை, பூச்சி மருந்து விற்பயிற்பனையாளர்கள் உரிமம் பெறுவதற்கான கட்டாயப் படிப்பாகும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில் பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை செடிகள் வளர்க்கும் தொழில்நுட்பம், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணையவழி தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மையில் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பம் ஆகிய புதிய பாடப் படிப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 18 மையங்களில் இந்த திறந்த வெளி பட்டயப்படிப்பு வழங்கப்படுவதாகவும், இதில் சேர விரும்புவோர் பல்கலைக்கழக இணையதள பக்கத்தில், ஆகஸ்ட் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்